×

வெறும் கையால் முழம்!: கோரிக்கைகளுக்கு பதில் சொல்லாமல் வார்த்தைகளால் வடை சுட்டுவிட்டு சென்றுவிட்டார் பிரதமர் மோடி..முரசொலி நாளிதழ் விமர்சனம்..!!

சென்னை: கோரிக்கைகளுக்கு பதில் சொல்லாமல் வார்த்தைகளால் வடை சுட்டுவிட்டுச் ஆழி சென்றுவிட்டார் பிரதமர் மோடி என்று முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வைத்த கோரிக்கைகள் எதற்கும் பதில் சொல்லாமல் கேட்ட தொகை எதையும் கொடுக்காயல் வெறும் கையால் முழம் போட்டு வார்த்தைகளால் வடை சுட்டு விட்டுச் சென்று விட்டார் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள். திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள்.

கடந்த மாதம் பெய்த மழையை கடுமையான இயற்கைப் பேரிடர்கள் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க தமிழ்நாட்டு மக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். சென்னையைச் சுற்றிய மாவட்டங்களில் மழை பெய்து வெள்ளம் ஆக்கியது டிசம்பர் 3ம் தேதி ஆகும். ஒரு மாதம் ஆகப் போகிறது. தென் மாவட்டங்களில் மழை பெய்கு வெள்ளம் ஆக்கியது டிசம்பர் 17,18 தேதிகள் ஆகும். இரண்டு வாரங்கள் முடித்துவிட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் அவர்கள் கோரி உள்ளார்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் அவர்களிடம் டெல்லி சென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வைத்த கோரிக்கை இது, கடந்த டிசம்பர் 19ம் தேதி அன்று இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை வைத்த இரண்டு வாரங்கள் ஆகப் போகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் இங்கு வந்து பார்த்துச் சென்றார். அவரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒன்றியக் குழு மூன்று நாட்கள் தங்கி ஆய்வை நடத்தியது. அவர்களிடமும் முதலமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கைகளை வைத்தார்.

ஆனால் இதுவரை முதலில் 450 கோடி ரூபாயும், பின்னர் 450 கோடி ரூபாயும் ஒன்றிய அரசிடம் இருந்து தரப் பட்டது. இதுவும் வழக்கமாக வரும் நிதி தானே தவிர, இப்போது ஏற்பட்ட புயல் மழை வெள்ளச் சேதங்க ளில் இருந்து மீட்கத் தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல. இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதி என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRP-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 200 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும்.

ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும். அதில் இருந்து தான் இப்போது நிதி கொடுத்துள்ளார்கள். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 900 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF- க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல.

குஜராத் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதும், அன்றைய தினமே அங்கு போய் பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் தமிழ்நாட்டுக்கு பார்க்க வரவில்லை. ஒரு மாதம் கழித்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போதும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களைப் போய் பார்க்கவில்லை. குஜ்ராத் மாநிலத்துக்கான நிதியை வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே அறிவிக்கிறார். ஆனால் தமிழ்நாடு ஒரு மாத காலமாக தட்டேந்தி நிற்கிறது. அது பிரதமர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரணத் தொகையாக 68 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இருக்கிறது. அதில் இருந்து தான் கேட்கிறோம். கொடுக்க மனமில்லை. அதனால் அவர்கள் கொடுக்கவில்லை.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியை விட இரண்டரை மடங்கு அதிகமாக பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு நிதி கொடுத்ததாக திருச்சி கூட்டத்தில் பிரதமர் பேசி இருக்கிறார். ஒரே ஒரு திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை மட்டும் பார்ப்போம். மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசின் சாதனையாகச் சொல்லப்படுகிறது. 2016 முதல் 2023 வரைக்கும் ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை 3 ஆயிரத்து 273 கோடி ரூபாய்.

மற்ற மாநிலங்களுக்கு பாருங்கள்…

மகாராஷ்டிரா ரூ.28,493 கோடி

கர்நாடகா ரூ.17, 532 கோடி

டெல்லி, உபி ரூ. 16,189 கோடி

டெல்லி, உபி, அரியானா ரூ.13,424 கோடி

மேற்கு வங்கம் ரூ.13,109 கோடி

குஜராத் ரூ.12,897 கோடி

உ.பி. ரூ.11,565 கோடி. இவற்றையும் பாருங்கள். தமிழ்நாட்டையும் பாருங்கள். ஏன் அந்த மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று நாம் கேட்கவில்லை. தமிழ்நாடு ஏன் புறக்கணிக்கப்படுகிறது. என்று தான் கேட்கிறோம். பா.ஜ.க. வைத்துள்ள வரைபடத்தில் தமிழ்நாடு ஏன் இல்லை என்று தான் கேட்டுறோம்.

“பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து, கல்வி மருத்துவம், அவசியத் தேவைகள், உதவிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டிய முக்கியக் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மாநிலத்திற்காக கோரிக்கை வைப்பதும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும் அங்கு வாழும் மக்களின் கோரிகைகள்தானே தவிர, அவை. ‘அரசியல் முழக்கங்கள்’ அல்ல.” என்ப-தையும் பிரதமருக்கு முன்னால் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். இவை பிரதமருக்கு புரியுமா எனத் தெரியவில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் புரிய வைப்பார்கள் என்பது தெரிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வெறும் கையால் முழம்!: கோரிக்கைகளுக்கு பதில் சொல்லாமல் வார்த்தைகளால் வடை சுட்டுவிட்டு சென்றுவிட்டார் பிரதமர் மோடி..முரசொலி நாளிதழ் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,Murasoli ,Modi ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...